Saturday 8 August 2015

ரக்பி விளையாட்டு வீரர் வாஸீம் தாஜூதீனின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு

2012 ம் ஆண்டு தாஜூதீன் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக போலீஸார் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த குடும்பத்தினர், அது தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றைக் கோரியிருந்த போதிலும் முறையான விசாரணைகள் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.  நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள போலீஸார், தாஜுதீனின் மரணம் வாகன விபத்தில் ஏற்பட்டதல்ல என்றும் அது ஒரு கொலை என்றும் போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தாஜுதீனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு அவரது குடும்பத்தினர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுத்துள்ள வேண்டுகோளின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாஜூதீனின் மரணத்திற்கான உண்மையான காரணங்களை கண்டறிவதற்கு அவரது சடலத்தை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியம் என்று போலீஸார் முன்வைத்த வேண்டுகோள் நியாயமானது என்று நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்தகட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10-ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment